ஈரோடு: ஈரோடு சி.என்.சி. கல்லூரி பின்புறம் காடு போல் ஒரு பகுதி உள்ளது. இங்குள்ள வழி தடத்தில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கண் பகுதியில் ஆழமான காயமும் இதே போல் தாடை பகுதியில் ஆழமான காயமும் இருந்தது. அவரை மர்ம ஆசாமிகள் கத்தியால் குத்தி கொலை செய்திருக்க கூடும். அல்லது கூர்மையான கல்லால் அவரை தாக்கி கொன்றிருக்க கூடும் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.இது குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ஈரோடு நேதாஜி நகரை சேர்ந்த ராஜ் (வயது 65) என தெரிய வந்தது. இவர் அந்த பகுதியில் உள்ள வேலன் நகரில் ஒரு தறி பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி (55) என்ற மனைவியும், விஜயலட்சுமி (35), சுப்புலட்சுமி (32) என்ற 2 மகள்களும், சிவகுமார் (30) என்ற ஒரு மகனும் உள்ளனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வர வழைக்கப்பட்டது.