கங்காடாக்: பி.எஸ்.கோலே என்று அழைக்கப்படும், சிக்கிம் கிராந்திகரி மோர்சா கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் நேற்று சிக்கிம் மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். சிக்கிமில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. சிக்கிமில் மொத்தம் 32 இடங்களில் தேர்தல் நடந்தது. தனி பெரும்பான்மை பெற 17 இடங்களில் வெல்ல வேண்டும். ஆளும் கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களில் வெற்றி பெற்றது. சிக்கிம் கிராந்திகரி மோர்சா கட்சி 17 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.