நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் நர்ஸ் அமுதவள்ளி, கணவர் ரவிச்சந்திரன், அரசு மருத்துவமனை டிரைவர் முருகேசன், புரோக்கர்கள் அருள்சாமி, பெங்களூருவை சேர்ந்த அழகுகலை நிபுணர் ரேகா உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் 7 பேர் நீதிமன்றங்களில் ஜாமீன் கேட்டு, தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில், இவ்வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நர்ஸ் அமுதவள்ளியின் தம்பி நந்தகுமார்(42), கடந்த 16ம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.