கரகஸ்: வெனிசுலா சிறை கலவரத்தில் 29 கைதிகள் உயிரிழந்தனர். வெனிசுலா நாட்டின் போர்ச்சுகீசா மாகாணத்தில் உள்ள அகரிகுவா சிறையில் 60 கைதிகள் மட்டுமே அடைக்கக் கூடிய இடத்தில் 500க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு இருந்தனர். இதனால் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி பாதிக்கப்பட்ட கைதிகள், சில நாட்களுக்கு முன் பார்வையாளர்கள் சிலரை பிணையக் கைதிகளாக சிறைப்பிடித்தனர். தகவல் அறிந்து அவர்களை மீட்க சென்ற போலீசார் மீது கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கைதிகள் தாக்குதல் நடத்தினர். போலீசாரும் பதிலடி தாக்குதல் தொடுத்தனர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் 29 கைதிகள் உயிரிழந்தனர். 19 போலீசார் காயமடைந்தனர். இதில் கலவரத்திற்கு தலைமை தாங்கிய வில்பிரடோ ராமோஸ் என்ற கைதியும் உயிரிழந்தான்.