தமிழகம் முழுவதும் அரசு அருங்காட்சியகங்களில் இனி மாதந்தோறும் கண்காட்சி

வேலூர்: தமிழகம் முழுவதும் அரசு அருங்காட்சியகங்களில் இனி மாதந்தோறும் கண்காட்சி நடத்த ஆண்டுக்கு ரூ25 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அருங்காட்சியகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் அரசு சார்பில் சென்னை, மாமல்லபுரம், காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு அருங்காட்சியகங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகங்களில் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தி, கருங்கற்கள், கற்சிலைகள், உலோக சிலைகள், நாணயங்கள் உள்ளிட்ட ஏராளமான வரலாற்றுக்கால சின்னங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதோடு ஏராளமான வரலாற்று நிகழ்வுகளுக்கான சான்றுகளும், அரிய வகையான புகைப்படங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பார்ப்பதற்காக உள்ளூர்வாசிகளும், வெளிநாட்டினரும் வருகின்றனர். இவர்களுக்கான கட்டணம் தனித்தனியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதோடு அருங்காட்சியகங்களில் அவ்வப்போது மாணவர்களுக்கு ஓவியம் உட்பட பல போட்டிகள் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களை மெருகேற்றும் வகையில், இனி மாதந்தோறும் தபால்தலைகள், ஓவியங்கள் என்று ஏதேனும் ஒரு தலைப்பைக் கொண்டு கண்காட்சி நடத்த அருங்காட்சியக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இனி மாதந்தோறும் அருங்காட்சியகங்களில் மாணவர்கள், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் புதுமையான கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து அருங்காட்சியக அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் உள்ள அரசு அருங்காட்சியகங்களில் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் மாதந்ேதாறும் இனி ஏதேனும் ஒரு தலைப்பில் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக ஆண்டுக்கு ஒரு அருங்காட்சியகத்திற்கு ரூ25 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories: