தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக போலீசார் அனுப்பிய சம்மன்களில் இறுதி முடிவு கூடாது: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக்கூடாது என உத்தரவிட்ட ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள், “ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவாக இருக்கும் நிலையில், அதே கருத்து கொண்டோரை துன்புறுத்துவது ஏன்? அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா, துன்புறுத்துவதா’’ என கேள்வி எழுப்பினர்.

தூத்துக்குடியை சேர்ந்த மோகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீண்டகாலமாக மக்கள் போராடி வருகிறார்கள். இதுதொடர்பான போராட்டத்தில் 2018 மே 22ல் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர். இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றியும் 4 மாதத்திற்குள்ளாக விசாரணையை முடிக்கவும் 2018 ஆகஸ்ட் 14ல் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.   

டிசம்பர் 14ம் தேதியோடு கால அவகாசம் முடிவடைந்து 5 மாதங்கள் ஆன நிலையிலும், இதுதொடர்பாக பெயரை குறிப்பிட்டு சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசன் கொண்ட ஒரு நபர் ஆணையம் விசாரணை செய்து வருகிறது. இதுவரை அதில் முடிவு வரவில்லை.

 தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த அனுமதி கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடி பெல் ஹோட்டலில் 22ம் தேதி (நேற்று) காலை 9 மணி முதல் 11 மணி வரை நினைவஞ்சலி கூட்டம் நடத்தவும், அதில் 500 பேர் பங்கேற்கவும் அனுமதி வழங்கினர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட எஸ்பியும்,  துணை கலெக்டரும்  107 மற்றும் 111 ஆகிய பிரிவுகளின் கீழ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிலருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியுள்ளனர்.

அதேபோல சிலரிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்யுமாறும் தெரிவித்துள்ளனர். இதேபோல் சம்மன் அனுப்பி பொதுமக்களை தொந்தரவு செய்தது  சட்டவிரோதமானது. ஆகவே தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது 107 மற்றும் 111 ஆகிய பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்ட சம்மன்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்க தடைவிதிப்பதோடு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தர், ஹேமலதா ஆகியோர், ‘‘சட்டவிரோத கைது நடவடிக்கைகளை நிறுத்துங்கள், போராட்டம் அடிப்படை உரிமை. ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவாக இருக்கும் நிலையில், அதே கருத்து கொண்டோரை துன்புறுத்துவது ஏன்? அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா, துன்புறுத்துவதா?’’ என கேள்வி எழுப்பினர். பின்னர் நீதிபதிகள், ‘‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக 107, 111 பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக்கூடாது. இப்பிரிவுகளின் கீழ் புதிதாக சம்மன்களை அனுப்பக்கூடாது’’ என உத்தரவிட்டு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Related Stories: