டிக்-டாகில் பிரபலமானதால் விபரீதம்: டெல்லி இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

டெல்லி: டிக்-டாக் செயலி மூலம் பிரபலமான நபர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த 24 வயதான இளைஞர் மோகித் மோர் என்பவர் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எனவே, டிக்-டாக் ஆப்பில் அடிக்கடி உடற்பயிற்சி குறித்த வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த வீடியோக்கள் மூலம் டிக்-டாக் ஆப்பில் பிரபலமான இவரை 5 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

இதனிடையே வழக்கம்போல உடற்பயிற்சிக்காக டெல்லியில் உள்ள உடற்பயிற்சி நிலையத்துக்கு சென்ற மோகித், அருகே இருக்கும் ஜெராக்ஸ் கடையில் தமது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மொகித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி போலீசார் கொலையாளிகளின் சிசிடிவி காட்சிகளை வைத்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், உயிரிழந்த மோகித்தின் டிக்-டாக் பதிவுகளையும் போலீசார் விசாரணைக்காக ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: