தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளால் ராக்கெட் வேகத்தில் பறந்த பங்குச்சந்தையில் திடீர் சரிவு

மும்பை: மும்பை பங்குச் சந்தைகள் இன்று வரலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில் தற்போது சரிவை சந்தித்துள்ளது.

மத்திய அரசின் சில கொள்கை முடிவுகளால் பொதுமக்களுக்கு பாதிப்புகள்

தேர்தலுக்கு பின்பு வெளியான கருத்துக்கணிப்புகளில் பாஜ மீண்டும் வெற்றி பெறும் என்று அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, பங்குச்சந்தைகள் நேற்று இமாலய உச்சத்தை எட்டின. வர்த்தகம் தொடங்கிய 60 விநாடிகளிலேயே, முதலீட்டாளர்களுக்கு ₹3.2 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. மத்திய அரசின் சில கொள்கை முடிவுகளால் தொழில்துறை முடக்கம், பொருளாதார வளர்ச்சி சரிவு, பெட்ரோல், சமையல் காஸ் விலை உயர்வு என பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. இதுதவிர, ரபேல் ஊழல் விவகாரமும் தேர்தல் நெருங்கும் நிலையில் விஸ்வரூபம் எடுத்தது. இதனால், பெரும்பாலான மாநிலங்களில் பாஜ மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருந்ததை காண முடிந்தது.

9 நாட்களாக பங்குச்சந்தைகள் கடும் சரிவு

எனவே, மீண்டும் பாஜ ஆட்சி வர வாய்ப்பில்லை என கருதிய முதலீட்டாளர்கள், தேர்தல் நெருங்க நெருங்க முதலீடுகளை மிகுந்த கவனமுடன் மேற்கொண்டனர். இதனால், கடந்த ஏப்ரல் 26ம் தேதியில் இருந்து தொடர்ந்து 9 நாட்களாக பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. இந்த 9 நாள் வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ரூ.8.53 லட்சம் கோடியை இழந்தனர். பங்குசந்தை குறியீடு 1,941 புள்ளிகள் சரிந்தது. இதன்பிறகும் பங்குச்சந்தையில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. ஆனால், கடந்த வாரத்தில் கடைசி 2 நாட்களில் பங்குச்சந்தை திடீர் ஏற்றம் கண்டது. கடைசி நாளான வெள்ளிக்கிழமை, மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 537.29 புள்ளிகள் அதிகரித்து 37,930.77 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 150.05 புள்ளிகள் உயர்ந்து 11,407.15 ஆகவும் இருந்தன.

கருத்துக் கணிப்புக்கு பிறகு பங்குச்சந்தைகள் அபார உயர்வு  

இதற்கிடையில், நேற்று முன்தினம் வெளியான கருத்துக்கணிப்புகளில் பாஜ மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கேற்ப நேற்று வர்த்தகம் துவங்கியதுமே, பங்குச்சந்தைகள் படுவேகமாக ஏற்றம் கண்டன. காலையில் வர்த்தகம் துவங்கிய 60 நொடிகளிலேயே, முதலீட்டாளர்களுக்கு 3.18 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 1,421.90 புள்ளிகள் உயர்ந்து 39,352.67 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 421.10 புள்ளிகள் அதிகரித்து 11,828.25 ஆக இருந்தது. ஒரே நாளில் இவ்வளவு புள்ளிகள் அதிகரித்தது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல் முறை. இதற்கு முன்பு 2013 செப்டம்பர் 10ம் தேதிதான் பங்குச்சந்தைகள் அபார உயர்வை சந்தித்தன.

பங்குச் சந்தைகள் சரிவு

இந்நிலையில் மும்பை பங்குச் சந்தைகள் இன்று 2வது நாளாக வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 219.06 புள்ளிகள் உயர்ந்து  39,571.73 ஆக உயர்ந்து வரலாற்று சாதனையை படைத்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 55.3 புள்ளிகள் அதிகரித்து 11,883.55 என்ற புதிய உச்சத்தை தொட்டது. நிஃப்டி 50ல் டாடா மோட்டார்ஸ், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், அதானி போர்ட்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை 2.66% முதல் 4.92% வரை குறைவாக வர்த்தகம் ஆகின.சென்செக்ஸ் உயர்வில் ரிலையன்ஸ் இண்டர்ஸ்டிரீஸ், ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவை அதிக முக்கியத்துவம் அளித்தன. இதனிடையே ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பங்குச் சந்தை தற்போது சரிவை சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 205 புள்ளிகள் சரிவுடன் 39,146 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 62 புள்ளிகள் சரிவுடன் 11,765 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Related Stories: