உடுமலை: கோடை வெயில் வறுத்தெடுப்பதால் சுற்றுலா பயணிகள் அருவி, அணை மற்றும் ஆறுகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ளது திருமூர்த்தி அணை மற்றும் அமராவதி அணை, ஆனைமலைபுலிகள் காப்பகத்திற்குட்பட்ட அணைகளை காண சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக நீர் நிறைந்த அணைகளின் கரைகளிலும், அதன் அருகே உள்ள பூங்காக்களிலும் குடும்பம்,குடும்பமாக அமர்ந்து உற்சாகமாக பொழுதை போக்கி வருகின்றனர். திருமூர்த்தி அணைக்கு தற்போது காண்டூர் கால்வாயில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் அணையில் ஓரளவு தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையின் அருகே உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதோடு, அதற்கு மேலே வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சலிங்க அருவிக்கும் சென்று வருகின்றனர். கத்திரி வெயில் தொடர்வதால் அணைக்கு மேல் பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து குறைந்து பாறையாக காட்சி அளிக்கிறது. பாறையை நனைத்து கொண்டு பைப் தண்ணீர் போல விழும் தண்ணீரையும் சுற்றுலா பயணிகள் பாட்டிலில் பிடித்து உடலை நனைத்து மகிழ்கின்றனர்.