பெரம்பூர்: இருமல் மருந்தில் போதை பொருள் கலந்து விற்பனை செய்த மெடிக்கல் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். ஓட்டேரி புது தெருவை சேர்ந்தவர் முருகேசன் (35). இவர், ஓட்டேரி - குன்னூர் சாலையில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் மாலை, இரவு நேரங்களில் இளைஞர்களின் கூட்டம் அதிகளவில் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி எஸ்ஐ சையது முபாரக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மெடிக்கல் கடையில் சோதனையிட்டனர். அப்போது, அங்கிருந்த இருமல் மருந்துகளில் சட்ட விரோதமாக போதை மருந்து கலந்து விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.