சென்னை: சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே, வேங்கடமங்கலம் கிராமம் உள்ளது. இங்கிருந்த, நடிகர் சங்கத்துக்கு சொந்தமான, 26 சென்ட் நிலத்தை, சங்கத்தின் தலைவராக இருந்த சரத்குமார், பொதுச்செயலராக இருந்த ராதாரவி உள்ளிட்ட நால்வர், முறைகேடாக விற்பனை செய்ததாக காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவில், நடிகர் விஷால் புகார் அளித்தார். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கை, வேறு ஏஜன்சியின் விசாரணைக்கு மாற்றவும், முறையான விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிடக் கோரி, நடிகர் சங்கத்தின் பொதுச்செயலர் விஷால் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, நீதிபதி புகார் குறித்து விசாரணை நடத்தி, மூன்று மாதங்களில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார். மேலும், விசாரணையை, காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி. கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை தொடர்ந்து நடிகர் விஷால் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர்கள் சரத்குமார் ராதாரவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.