காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை, ஒரு ராணுவ வீரர் வீரமரணம்

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ஜெயிஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுடன் நீண்ட நேரமாக நீடித்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். மேலும் 2 வீரர்களும் பொதுமக்களில் ஒருவரும் படுகாயம் அடைந்தனர்.

தீவிரவாதிகளை ஒடுக்க தனிப்படை

சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஆந்திரா, காஷ்மீர், ஒடிசா ஆகிய மாநிலங்கள் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக விளங்கி வருகிறது. ஆதலால் இங்கு அடிக்கடி போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தீவிரவாதிகளை ஒடுக்குவது குறித்து மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக ஒவ்வொரு மாநிலமும் தனிப்படை குழு அமைத்துள்ளது.

ஜெயிஷ்-இ-முகமது தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை  

இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தலிபொரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இன்று காலை அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கி இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். பதிலுக்கு பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜெயிஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஊரடங்கு உத்தரவு அமல்

என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து 3 தீவிரவாதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சண்டை நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து தலிபொரா பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தால் அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. தீவிரவாதிகளை தேடும் பணிக்காக படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: