விருதுநகர்: விருதுநகரில் முறையான அனுமதியின்றி செயல்பட்டு வந்த 21 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வீரப்பெருமாள் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், விருதுநகர் மாவட்டம் கடும் வறட்சி மிகுந்த பகுதி. இங்கு நிலத்தடி நீர் என்பது கேள்விக்குறியான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில் குடிப்பதற்கு நீர் கிடைப்பதே மிகவும் சிரமமாக உள்ளது. இந்த நிலையில், சிவகாசி, ஆனைக்குட்டம், திருச்சுள்ளி, அருப்புக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு (மினரல் வாட்டர்) நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், சுமார் 21 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வருகிறது. ஒரு சில நிறுவனங்கள் மாவட்ட அதிகாரியிடம் அனுமதி பெற்றிருந்தாலும், அனுமதி வாங்கிய அளவை விட அதிக அளவில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருவதாக மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.