கோவை நீதிமன்றம் அருகே 2 இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு: மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை

கோவை: கோவை நீதிமன்றம் அருகே 2 இளைஞர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை உப்பிலிப்பாளையம் சிக்னல் அருகே பிரதீப், தமிழ் என்ற இருவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்களை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். வெட்டுப்பட்ட இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இருவரும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த ரேஸ் கோர்ஸ் காவல்நிலைய போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் கோவை நீதிமன்றத்தில் குற்ற வழக்கில் ஆஜராகிவிட்டு வெளியே வந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாது, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்ததில், இந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் காலை முதலே இப்பகுதியில் சுற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே நீதிமன்றம் மற்றும் காவல் ஆணையர் அலுவலகம் உள்ளது. இந்நிலையில், இதுபோன்ற முக்கிய பகுதியல் பட்டப்பகலில் அரிவாள் வெட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: