நல்லகண்ணு, கக்கன் குடும்பத்திற்கு அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கித்தர வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: நல்லகண்ணு, கக்கன் குடும்பத்திற்கு அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கித்தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தாமிரபரணி நதிக்கரையில் திருவைகுண்டத்தில் பிறந்து, இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டக் களத்தில் குதித்தவர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டு, பின்னர் பொதுஉடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட நல்லகண்ணு, மக்கள் போராளியாக உருவெடுத்தார்.

வாழ்நாள் முழுவதும் போராட்டக் களங்களிலேயே நிற்பவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் காவலராகப் போராடியவர். நான்குநேரி வானமாமலை கோயிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துச் செல்லும் போராட்டம், வீடுகளுக்கு நிலை வைத்துக்கொள்ளும் உரிமையை நிலைநாட்டும் போராட்டம், செருப்பு அணிந்து பொது வீதிகளில் நடக்கும் போராட்டம் போன்றவை நல்லகண்ணுவின் போர்க்குணத்தை வெளிப்படுத்தியவை. மக்கள் தொண்டராக எளிய வாழ்வில் எல்லோருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து வரும் அண்ணன் நல்லகண்ணு தனது வாழ்விணையரையும் இழந்த நிலையில், 94 வயதில் தியாகராயர் நகர் அரசுக் குடியிருப்பில் வசித்து வந்தார்.2007ம் ஆண்டு டாக்டர் கலைஞர், நல்லகண்ணுவுக்கு அரசுக் குடியிருப்பை இலவசமாக ஒதுக்கீடு செய்தார். ஆனாலும் அதற்கு குடியிருப்பு வாடகைத் தொகையை அரசுக்குச் செலுத்தி வந்தவர்.

நல்லகண்ணுவின் தியாகத்தைப் பற்றியும், மக்களுக்கு அவர் ஆற்றிய பொதுத் தொண்டையும் மதிக்கத் தெரியாத எடப்பாடி பழனிச்சாமி அரசு, அரசுக் குடியிருப்பிலிருந்து அவரை வெளியேற்றிய முறை வன்மையான கண்டனத்துக்கு உரியது. மன்னிக்க முடியாதது. பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தியாக சீலர் கக்கனுக்கு வழங்கப்பட்ட குடியிருப்பிலிருந்து அவரது குடும்பத்தினரை வெளியேற்றி இருப்பதும் கண்டிக்கத்தக்கது. எடப்பாடி பழனிச்சாமி அரசு இத்தகைய செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், நல்லகண்ணுவுக்கும், கக்கன் குடும்பத்திற்கும் அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கித் தரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: