பாகிஸ்தானில் பரபரப்பு ஓட்டலில் தீவிரவாதிகள் ராணுவம் சுற்றிவளைப்பு

கராச்சி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 5 நட்சத்திர ஓட்டலில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த 3 தீவிரவாதிகளை ராணுவம் சுற்றிவளைத்தது. இரு தரப்பினர் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குவாடரில், பேர்ல் கான்டினன்ட் 5 நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்கு வழக்கம்போல் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தங்கியிருந்தனர்.  நேற்று மாலை 4.30 மணி அளவில், ஓட்டலில் சில தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக ராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் ஓட்டலை  சுற்றிவளைத்தனர்.

சுற்றுலா பயணிகள், ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஓட்டலில் பதுங்கிய தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பிலும் இரவுவரை துப்பாக்கி சண்டை  நடந்தது. இதில், ஓட்டலில் பதுங்கிய 3 தீவிரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர். இச்சம்பவம் குவாடரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அருகில் உள்ள ஓட்டல்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் குவாடரின் ஆர்மரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 14 பேர் பலியான நிலையில் இச்சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: