பாரீஸ்: பிரான்சில் பெட்ரோல், டீசலுக்கான வரி உயர்வை கண்டித்து கடந்த ஆண்டு மஞ்சள் அங்கி போராட்டம் நடத்தப்பட்டது. அரசுக்கு எதிராக வார இறுதி நாளில் திரளான மக்கள் பங்கேற்ற இப்போராட்டத்தால் நல்ல முடிவு எட்டியது. வரியை குறைக்க அரசு சம்மதித்தது. ஆனாலும், பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து மஞ்சள் அங்கி போராட்டம் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்தது. இதில் வன்முறை சம்பவங்கள் வாடிக்கையாகி வருகின்றன. பல இடங்களில் பொது சொத்து தேசப்படுத்தப்படுகிறது. சில இடங்களில் கடைகள் சூறையாடப்படுகின்றன.இந்நிலையில், நேற்று முன்தினம் தொழிலாளர் தினத்தையொட்டி மே தின பேரணி நாடு முழுவதும் நடந்தது. இப்பேரணியில் 1.50 லட்சம் பேர் பங்கேற்றனர். தலைநகர் பாரீசில் நடந்த பேரணியில் மஞ்சள் அங்கி போராட்டக்குழுவினர் பங்கேற்று கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அவர்களை விரட்ட போலீசார் நகரெங்கும் குவிக்கப்பட்டிருந்தனர். திடீரென போலீசாருக்கும், பேரணி சென்றவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.