சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மராட்டிய மாநிலம் மலேகான் நகரில் 2008ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி நடந்த குண்டு வெடிப்புகளின் பின்னணியில் இந்துத்வா அமைப்புகளின் தீவிரவாத பிரிவினர் சம்பந்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த குண்டு வெடிப்பு வழக்கில் இந்துத்வா அமைப்பை சேர்ந்த சாத்வி பிரக்யாசிங் தாகூர் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் 2014ல் பாஜ ஆட்சி அமைந்தவுடன் மலேகான் குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து பிரக்யாசிங் தாகூரை விடுவிக்க அரசு வழக்கறிஞரான ரோகினி சலியன் மீது அழுத்தம் தர ஆரம்பித்தனர். இந்த வழக்கில் நீதிபதி முன்னால் பிரமாணம் செய்து சாட்சி சொன்னவர்கள் பிறழ் சாட்சிகளாக மாற நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பிரக்யா சிங் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இத்தகைய பயங்கரவாத செயலில் ஈடுபட்ட சாத்வி பிரக்யாசிங் தாகூரை, போபால் மக்களவை தொகுதியில் வேட்பாளராக பாஜ நிறுத்தியிருக்கிறது.