சென்னை: ரயில் நிலைய நடைமேடையில் விளையாடிய போது, எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் தவறி விழுந்த சிறுவன் மீது ரயில் மோதியதில் பரிதாபமாக இறந்தான். கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருண்கோபால். தொழிலதிபர். இவரது மகன் ஆதித்யா (9). நேற்று இவர் குடும்பத்துடன் வெளியில் சென்று விட்டு, வீட்டிற்கு செல்வதற்காக ஆதித்யாவும், பெற்றோரும் மாம்பலம் ரயில் நிலையம் வந்தனர். சிறுவன் அங்குள்ள நடைமேடையில் விளையாடிய போது, எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் தடுமாறி கீழே விழுந்தான். அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயில் சிறுவன் மீது மோதியது. இதில், ஆதித்யா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். தகவலறிந்து வந்த மாம்பலம் ரயில்வே போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சார ரயில் மோதி சிறுவன் பலியான சம்பவம் அங்கிருந்த பயணிகளை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.