புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) 2018-19ம் நிதியாண்டிற்கு 8.65 சதவீதமாக வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) நிர்ணயம் செய்த வட்டி விகிதத்திற்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. இதனால், அமைப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 6 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறுவர். வருங்கால வைப்பு நிதிக்கு 2018-19ம் நிதியாண்டிற்கு 8.65 சதவீதம் வட்டி வழங்க அதை நிர்வகிக்கும் அமைப்பு முடிவு செய்தது. இதற்கு மத்திய நிதியமைச்சகத்தில் ஒரு பிரிவாக உள்ள நிதி சேவைகள் துறை (டிஎப்எஸ்) ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த பிப்ரவரியில் இபிஎப்ஓ-ன் அறங்காவலர்கள் கூட்டம் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கேங்வார் தலைமையில் நடைபெற்றது. அதில், 2018-2019ம் நிதியாண்டிற்கு வட்டி விகிகத்தை 8.65 சதவீதமாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் இபிஎப் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது.