சூலூர்: கோவையை அடுத்த சூலூரில் வரும் மே 19ம் தேதி இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருக்கும் அம்பிகா என்பவர் நேற்று காலை பாப்பம்பட்டி, கள்ளப்பாளையம், மற்றும் போகம்பட்டி ஊராட்சிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் அ.தி.மு.க.வினரை, பாப்பம்பட்டியில் உள்ள சமுதாய கூடத்திற்கு வரவழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவர் தேர்தல் பணிக்காக வெளியூர்களில் இருந்து அ.தி.மு.க.வினர் அதிகளவில் வர உள்ளதாகவும், அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தர வேண்டும் எனவும், அதற்காக கூடுதல் நேரம் தண்ணீர் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சுகாதார பணியாளர்கள் மற்றும் சுய உதவி குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.