துபாய்: பூமியில் ஏற்படும் நிலநடுக்கம் போன்று செவ்வாய் கிரகத்திலும் நடுக்கம் ஏற்பட்டதாக ஒலி அதிர்வலைகளின் மூலம் இன்சைட் விண்கலம் பதிவு செய்துள்ளது. முதல் முறையாக இது போன்ற தகவல் செவ்வாய் கிரகத்திலிருந்து கிடைத்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் நாசா விண்வெளி மையத்தால் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட இன்சைட் தானியங்கி விண்கலம் 483 மில்லியன் கிமீ தூரத்தைக் கடந்து 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தை அடைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் பிரதான பணியாக செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலை, சுழற்சி மற்றும் நில அதிர்வு உள்ளிட்டவைகளை பதிவு செய்து நாசாவின் விண்வெளி மையத்திற்கு அனுப்புவதுதான். இதற்கான அதிநவீன கருவிகளை கொண்டுள்ள இந்த விண்கலத்தினால் செவ்வாய் கிரகத்தின் நிலபரப்பை ஊடுருவி ஆய்வு செய்ய முடியும். செவ்வாயின் மேற்பரப்பில் இந்த விண்கலத்தின் எஸ்இஐஎஸ் என்றழைக்கப்படும் நவீன கருவி நிறுவப்பட்டு செவ்வாய் கிரகத்தின் உட்புறத்தின் துல்லியமான முப்பரிமாண மாதிரிகள் வழங்கும் தொழில் நுட்பத்தை கொண்டுள்ளது.