செம்மரம் கடத்தல் வழக்கு : திருவண்ணாமலையை சேர்ந்த 498 பேருக்கு ஆந்திர போலீஸ் சம்மன்!

திருவண்ணாமலை : செம்மரம் கடத்திய வழக்கில் ஆஜராக திருவண்ணாமலையை சேர்ந்த 498 பேருக்கு சம்மன் ஆந்திர போலீசார் அனுப்பியுள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டுவதற்கு அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி சில ஏஜெண்டுகள் தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கூலித்தொழிலாளர்களை அழைத்து செல்கின்றனர். அவ்வாறு செல்லும் தொழிலாளர்கள் செம்மரங்களை வெட்டும்போது ஆந்திர மாநில வனத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட போளூர், ஜமுனமரத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 498 பேர் மீது செம்மரக் கடத்தல் வழக்கு உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களை ஆந்திர கோர்ட்டில் ஆஜர்படுத்தவும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆந்திர மாநில செம்மரகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. காந்தாராவ், திருவண்ணாமலை எஸ்.பி. சிபி சக்கரவர்த்தியிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து எஸ்.பி. உத்தரவுப்படி தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த போலீசார் 10 குழுக்களாக சென்று வருகிற 30ம் தேதி ஆந்திர மாநில கோர்ட்டில் ஆஜராகும்படி 498 பேருக்கு நீதிமன்ற உத்தரவு நகலை வழங்கியுள்ளனர். இதேபோல் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ் குமாருடன் ஆந்திர வனத்துறை மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: