சென்னை: சென்னை அடுத்த திருவள்ளூர் அருகே இரண்டு வேன்களில் கொண்டு வரப்பட்ட ₹140 கோடி மதிப்பிலான 1,407 கிலோ தங்க கட்டிகள் மற்றும் நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்க பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பல்வேறு பகுதிகளில் நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியின் பொது பார்வையாளராக சுரேந்திரகுமார், மாவட்ட தேர்தல் அலுவலராக மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் உள்ளனர். இவர்கள் 2 நாட்களுக்கு முன்பாக பறக்கும்படை குழுவின் வாகன சோதனை குறித்து ஆய்வு நடத்தினர்.அப்போது வாகன சோதனை திருப்திகரமாக இல்லை. சோதனையில் தீவிரம் காட்ட வேண்டும். கூடுதலாக பறக்கும்படை குழு அமைக்கப்பட்டு, வாகன சோதனையை அதிகரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். தொடர்ந்து நேற்று முன்தினம் கூடுதலாக 30 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டன. மாவட்டத்தில் தற்போது 90 பறக்கும் படை குழுக்கள் வாகன சோதனையில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே பிடிஓ செல்லப்பாண்டியன் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் நேற்று இரவு 7 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு டெம்போ வேன்களை நிறுத்தி சோதனை செய்தனர். வேனில் தனித்தனி பெட்டிகளில் 1,407 கிலோ எடையுள்ள தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் இருப்பது தெரிந்தது.