கொழும்பு,: இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட , ராஜபக்சேவின் சகோதரர் கோதைபய ராஜபக்சே தயாராகி வருகிறார். இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் ஆட்சியில் நடந்த இறுதிக்கட்ட போரில் ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த காலக்கட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜபக்சேவின் சகோதரர் கோதபைய ராஜபக்சே இருந்தார். தற்போதைய அதிபர் சிறிசேனாவின் ஆட்சிக்காலம் முடிய உள்ள நிலையில், வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் இலங்கையில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. ராஜபக்சே ஏற்கனவே 2 முறை அதிபர் பதவி வகித்ததால், அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, அவரது கட்சி சார்பில் கோதபைய ராஜபக்சேவை களமிறக்க முயற்சி நடக்கிறது. இவர் ,அமெரிக்க குடியுரிமையும் பெற்றுள்ளார். அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும். இதற்காக அமெரிக்கா சென்று நேற்று நாடு திரும்பிய அவர், கொழும்புவில் அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ய நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகின்றன. நிச்சயம் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்’’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.