மைசூரு: மஜதவுக்கு ஆதரவாக ஆடியோ மூலம் பிரசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் மைசூரு தாசில்தாரை தேர்தல் பணியில் இருந்து உடனடியாக விடுவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். மைசூரு மாவட்டம் சரகூரு தாலுகா முதல் நிலை தாசில்தாராக பணியாற்றி வந்தவர் ரேணுகுமார். இவர் மஜதவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு பொறுப்பேற்ற அவர் மஜதவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து ஆடியோ டேப்பில் பதிவு செய்து வெளியிட்டதாக புகார் கூறப்பட்டது. மேலும் அந்த ஆடியோவில் உயர் கல்வித்துறை அமைச்சர் ஜிடி தேவகவுடா, பொதுப்பணித்துறை அமைச்சர் எச்.டி.ரேவண்ணா ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்று இருந்தது. இதையொட்டி கங்கராஜு என்ற வக்கீல், மாவட்ட கலெக்டர் அபிராம் ஜி சங்கரை சந்தித்து தாசில்தார் ரேணுகுமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தார்.