ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அதிரடி வீரர்கள் அதிகம் இருந்தாலும், நடப்பு சீசனில் வெற்றி தேவதையின் கடைக்கண் பார்வை அந்த அணி மீது இதுவரை படவேயில்லை. ஹாட்ரிக் தோல்வியுடன் துவண்டு போயிருந்த ஆர்சிபி அணி, தனது 4வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சிடமும் மண்ணைக் கவ்வியது அந்த அணியின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஜெய்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில் டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச, ஆர்சிபி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்தது. தொடக்கத்திலேயே கோஹ்லி 23, டி வில்லியர்ஸ் 13, ஹெட்மயர் 1 ரன் எடுத்து ஷ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தது பெரும் பின்னடைவை கொடுத்தது. உறுதியுடன் போராடிய பார்திவ் 67, ஸ்டாய்னிஸ் 31, மொயீன் அலி 18 ரன் எடுத்து கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினர். அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 19.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து வென்றது. கேப்டன் ரகானே 22, பட்லர் 59, ஸ்மித் 38, திரிபாதி 34* ரன் விளாசினர். ராஜஸ்தான் அணியும் முதல் 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருந்த நிலையில், ஆர்சிபிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியா 4வது தோல்வி கண்டது குறித்து பெங்களூர் அணி கேப்டன் கோஹ்லி கூறியதாவது: இது மிக நீண்ட தொடர் கிடையாது. ஒன்றரை மாதம் அல்லது அதிகபட்சமாக இரண்டு மாதத்துக்கு நடக்கும்.