சென்னை: ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசியது. சிஎஸ்கே தொடக்க வீரர்களாக அம்பாதி ராயுடு, ஷென் வாட்சன் களமிறங்கினர். 8 பந்துகளை சந்தித்த ராயுடு 1 ரன் மட்டுமே எடுத்து ஆர்ச்சர் வேகத்தில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் பிடிபட, சென்னை அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. வாட்சன் 13 ரன் எடுத்து பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேதார் ஜாதவ் 8 ரன்னில் வெளியேற, சூப்பர் கிங்ஸ் 4.5 ஓவரில் 27 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தது. இந்த நிலையில், சுரேஷ் ரெய்னா - கேப்டன் டோனி ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 61 ரன் சேர்த்தது. ரெய்னா 36 ரன் விளாசி உனத்கட் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். அடுத்து டோனி - பிராவோ ஜோடி ஸ்கோரை உயர்த்த போராடியது. பிராவோ 27 ரன்னில் ஆர்ச்சர் வேகத்தில் குல்கர்னியிடம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் டோனி சிக்சர்களாகத் தூக்கி சென்னை ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார்.