தாகா: வங்கதேசத்தில் 22 அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கிய வெளிநாட்டவர் உள்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்தனர். வங்கதேச தலைநகர் தாகாவில் அமைந்துள்ளது பனானி பகுதி. இங்கு 22 அடுக்குமாடிகள் கொண்ட எப்.ஆர். டவரில் நேற்று மதியம் 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதலில் 8வது மாடியில் பற்றிய தீ அடுத்த சில நிமிடங்களில் மளமளவென மற்ற மாடிகளுக்கும் பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் 50 சதவீத தீயை அணைத்தனர். தீயின் வெப்பம் தாள முடியாமல் சிலர் மாடியில் இருந்து கீழே குதித்ததாகவும் பலர் ஜன்னல் வழியே காப்பாற்றும்படி கதறியதாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தீயை அணைக்கும் பணியில் 21 தீயணைப்பு வண்டிகள் ஈடுபட்டன.