கொல்கத்தா: ‘‘நீரவ் மோடி உள்ளிட்ட கடன் வாங்கி தப்பியவர்களுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையானது அரசியலில் ராகுலுக்கு விழுந்திருக்கும் பலத்த அடி’’ என மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ கூறி உள்ளார். கொல்கத்தாவில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், பொய்களின் அடிப்படையில் செய்துவரும் பிரசாரத்தால் நாடு அசாதாரண சூழலை எதிர்கொண்டிருக்கிறது. அனைத்து பொய்களும் உண்மையாகிவிடும் என்பது ராகுலின் மாயை. ஆனால், ரபேல் முதல் நீரவ் மோடி, மெகுல் சோக்ஷி வரை அவர் கூறிய அனைத்தும் தவிடுபொடியாகி உள்ளது. லண்டனில் நீரவ் மோடி கைது செய்யப்பட்ட விவகாரம், ராகுலின் பொய் வலைப்பின்னலை அம்பலப்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டுகிறார். ஆனால், உண்மையில் நீரவ் மோடி, மெகுல் சோக்ஷி, விஜய் மல்லையா போன்றவர்கள் கடன் பெற்றது முந்தைய காங்கிரஸ் ஆட்சியில்தான்.