யான்செங்: சீனாவின் கிழக்கே யான்செங் நகரில் அமைந்த ரசாயன ஆலை ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. அதில் உயிரிழப்பு 47 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 600க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்துக்குட்பட்ட யான்செங் நகரில் மிகப்பெரிய தொழிற்பேட்டை ஒன்று அமைந்துள்ளது. இங்கு பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் ரசாயன உரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது. தொழிற்சாலையில் இருந்து வேகமாக பரவிய தீயால் அருகாமையில் உள்ள தொழிற்சாலைகளும் பலத்த சேதமடைந்தன. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தொழிற்சாலைகளுக்குள் சிக்கித் தவித்த பலரை மீட்டனர்.