வேலூர்: தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 18ம்தேதி நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும்படையில் 39 குழுவினர், நிலைக்கண்காணிப்பு குழுவில் 39 குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.தாசில்தார் நிலையில் உள்ள ஒருவர், காவலர், டிரைவர் ஆகியோர் நியமிக்கப்பட்டு, இவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாகனங்களில், பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இதற்காக இவர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. வேலூரில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் தேர்தல் விதிகளை கண்காணிக்கும் பறக்கும் படையினர், நிலைக்கண்காணிப்பு குழுவினர் தாங்கள் பயன்படுத்தும் வாகனங்களில் ஏசி பயன்படுத்த தடை விதித்தும், 1 லிட்டர் எரிபொருளுக்கு 10 கிலோ மீட்டர் மைலேஜ் வரவேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.கொளுத்தும் வெயிலில் ஏசி பயன்பாட்டிற்கு தடை விதித்திருப்பதால் தேர்தல் நடத்தை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.