திருச்சி: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் திருச்சியில் ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை செய்துகொண்டார். அவரது காதலன் பைக்கை லாரி மீது மோதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், குளித்தலை திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் குமார். இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ராஜலட்சுமி (25). இவர் கடந்த 2017ம் ஆண்டு திருச்சி ஆயுதப்படையில் பெண் போலீசாக பணியில் சேர்ந்தார். திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி பணிக்கு சென்று வந்தார். நேற்று அறையில் இருந்த ராஜலட்சுமி திடீரென அரளி விதையை அரைத்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜலட்சுமி இறந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். ராஜலட்சுமியை மருத்துவமனையில் அனுமதித்தது யார் என விசாரித்தபோது பெட்டவாய்த்தலையை சேர்ந்த காவலர் சிவகுமார் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், சிவகுமார், 2017ம் ஆண்டு திருச்சியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிக்கு சேர்ந்தார்.