புதுடெல்லி: முல்லை பெரியாறு அணைப் பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பான வழக்கு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தாமாக முன்வந்து விலகியதை அடுத்து வழக்கு வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணைக்கட்டு பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்தம் கட்டுவதற்காக கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்த்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கேரளாவை சேர்ந்த தங்கப்பன், ஆப்ரகாம் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்தனர். தமிழக அரசும் இந்த வழக்கில் மனுதாரராக இணைந்தது. நீர்ப்பிடிப்பு பகுதி; வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் என்று தமிழக தரப்பில் வாதிட்டும், ஏற்காமல், தென்மண்டல தீர்ப்பாயம் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்தம் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கியது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கடந்த விசாரணையில் இரு மாநில அரசின் கோரிக்கைகளையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது; இறுதி விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தது.