இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில், நம்பர் 1 வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் 4வது சுற்றில், சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக்குடன் (23வது ரேங்க்) மோதிய ஒசாகா 3-6, 1-6 என்ற நேர் செட்களில் தோல்வியைத் தழுவினார். இப்போட்டி 1 மணி, 8 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு 4வது சுற்றில் 2வது ரேங்க் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ரோமானியா) 2-6, 6-3, 2-6 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ர்ய்சோவாவிடம் (61வது ரேங்க்) தோற்றார். தரவரிசையில் முதல் 2 இடங்களில் உள்ள வீராங்கனைகளும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றிலேயே மண்ணைக் கவ்வியது குறிப்பிடத்தக்கது. முன்னணி வீராங்கனைகள் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), பியான்கா ஆண்ட்ரீஸ்கு (கனடா), கார்பினி முகுருசா (ஸ்பெயின்), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), கரோலினா பிளிஸ்கோவா (செக்.) ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.