ஸ்ரீநகர்: புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் 23 வயது எலக்ட்ரீஷியன் என பாதுகாப்பு படையினர் நடத்திய விசாரணையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த மாதம் 14ம் தேதி நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் பலியாயினர். வேனில் வெடி பொருட்கள் நிரப்பி தாக்குதல் நடத்தியவன் அடில் அகமது தர் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில், இந்த தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டவர்களை கண்டறியும் பணியில் தேசிய புலனாய்வு குழு இறங்கியுள்ளது. இது குறித்து பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது: புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன், வெடி பொருட்களை ஏற்பாடு செய்தவன் முடாசிர் அகமது கான்(23) என அடையாளம் காணப்பட்டுள்ளது. புல்வாமா பகுதியைச் சேர்ந்த இவன் ஐடிஐ.யில் ஓராண்டு எலக்ட்ரீசியன் படிப்பு முடித்துள்ளான். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் 2017ம் ஆண்டு சேர்ந்துள்ளான். இவனை இந்த அமைப்பில் தீவிரமாக செயல்பட வைத்தது நூர் முகமது டான்ரே. இவன் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொல்லப்பட்டான். அதன்பின், அகமதுகான் கடந்தாண்டு ஜனவரி 14ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் சேர்ந்து தீவிரமாக செயலாற்றி வந்தான்.