புதுச்சேரி: புதுவையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக பணியில் இறங்கியுள்ளன. தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பே தேர்தல் அலுவலகத்தை என்ஆர் காங்கிரஸ் திறந்துள்ளது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் தனது கட்சி ஆபீசை நவீன வசதிகளுடன் புதுப்பித்து தயார் நிலையில் வைத்துள்ளது.புதுவையில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. புதுச்சேரி வைசியாள் வீதியில் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் தான் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தை பல்வேறு நவீன வசதிகளுடன் காங்கிரஸ் கட்சி புதுப்பித்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் பேச வீடியோ கான்பரன்சிங் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வருகிற 13ம்தேதி ேஹாமம் நடத்தி கட்சி அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். விரைவில் வேட்பாளரை அறிவித்து பணியை துவக்க உள்ளனர்.
இதனிடையே புதுச்சேரியில் பிரதான எதிர்க்கட்சியான என்ஆர் காங்கிரசும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இக்கட்சி சார்பில் டாக்டர் கேசவன் நாராயணசாமி களமிறங்குவது உறுதியாகிவிட்டது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் ரங்கசாமி வெளியிட திட்டமிட்டுள்ளார்.