ராமேஸ்வரம் : தனுஷ்கோடி பகுதியில் நேற்று வனத்துறையினரால் கடல் ஆமை பொறிப்பகத்தில் இருந்த 96 ஆமை குஞ்சுகள் தென்கடலில் விடப்பட்டது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாழும் அரிய வகை கடல் ஆமைகள், நள்ளிரவு கரையோர மணலில் நூற்றுக்கணக்கில் முட்டையிட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விடும். இந்த முட்டைகளை மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின காப்பக வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டு குஞ்சு பொறிப்பகத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். கடந்த ஜனவரி 14ம் தேதி துவங்கி, ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி, கீழக்கரை, தூத்துக்குடி கடலோர பகுதிகளில் மட்டும் கடந்த 50 நாட்களில், 12,089 கடல் ஆமை முட்டைகள் வனத்துறையினரால் மீட்கப்பட்டு, குஞ்சு பொறிப்பகங்களில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது.