வேப்பனஹள்ளி அரசு பள்ளியில் குடிநீர் வசதியின்றி மாணவர்கள் அவதி

வேப்பனஹள்ளி :  வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிநீர் வசதி செய்து தரப்படாததால், மாணவர்கள் தெருகுழாயில் தண்ணீர் பிடித்து பயன்படுத்தும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.  வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் குடிநீர் வசதி செய்து தரப்படாததால் மாணவர்களும் தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரிய, ஆசிரியைகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால், மாணவர்கள் பள்ளியின் நுழைவாயில் முன் சாலையோரம் உள்ள தெருக்குழாயில் தண்ணீர் பிடித்து பயன்படுத்தும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.   இந்த குழாய் பழுதடைந்துள்ளதால் 24 மணி நேரமும் தண்ணீர் வெளியேறி, அருகில் தேங்கி சாக்கடையாக மாறியுள்ளது. கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாக காரணமாகிறது. தற்போது, கடும் வெயில் அடித்து வருவதால் மாணவர்கள் இந்த குழாயில் தண்ணீரை பிடித்து குடிக்கின்றனர்.

தவிர, தேங்கியுள்ள தண்ணீரை தெரு நாய்கள், கால்நடைகள் குடிக்கும் நிலை காணப்படுகிறது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும்.  தெரு குழாயில் தண்ணீர் வீணாவதை தடுக்கவும், குழாயை சுற்றிலும் கான்கிரீட் தளம் அமைத்து, கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: