மதுரை: ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி பெற ஊரகப்பகுதிகளில் 40 லட்சத்து 70 ஆயிரத்து 881 பேரும், நகர் பகுதிகளில் 11 லட்சத்து 60 ஆயிரத்து 234 பேரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர் என கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மதுரையை சேர்ந்த தினேஷ்பாபு ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்குவது ஏற்கத்தக்கதல்ல. உண்மையான பயனாளிகளை கணக்கெடுப்பதிலும் சிக்கல், முறைகேடுகள் நிகழும். ஆகவே, கணக்கிடுவதில் உள்ள முரண்களை களைந்து தேர்தல் முடிந்தபின் உண்மையான பயனாளிகளை கண்டறிந்து வழங்க வேண்டும். அதுவரை இந்த திட்டத்தை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.