சென்னை: ஹோண்டா நிறுவனம் மூலம் பயிற்சி பெற்ற தமிழக வீரர்கள், இந்தியா சார்பில் மலேசியாவில் நடைபெற உள்ள ஆசிய அளவிலான பைக் ரேஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இது குறித்து ஹோண்டா மோட்டர் சைக்கிள் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரபு நாகராஜ் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் இருந்து உலகத் தரத்திலான மோட்டார் பந்தய வீரர்களை உருவாக்கும் பணியில் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதற்காக ஷோவா நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் இளம் வீரர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கிறோம். 21 நகரங்களில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் இருந்து 13வயது முதல் பல்வேறு வயது பிரிவினர் 132 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 12 பேரை தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகிறோம். மே, ஜூன் மாதங்களில் தாய்லாந்தில் நடைபெற உள்ள டேலன்ட் கப் சீசனுக்கான போட்டியாளர்கள் குழுவில் சென்னையை சேர்ந்த மொகமது மிகெய்ல் (14), கர்நாடகாவை சேர்ந்த ஹ்ருதிக் ஹபிப் (18) பங்கேற்கின்றனர்.