புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ20,000 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு, இதன் வரி வருவாய் அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், உச்சபட்ச வரி விதிப்பான 28 சதவீத பிரிவில் இருந்து பெரும்பாலான பொருட்கள் குறைந்த வரி பிரிவுக்கு மாற்றப்பட்டதால் ஜிஎஸ்டி வருவாய் கணிசமாக குறைந்து வருகிறது. இதற்கு வரி குறைப்பு மட்டுமல்ல, வரி ஏய்ப்பும் காரணம். இன்புட் வரி கிரெடிட் பெறுவதற்கு போலி பில் தயாரித்து முறைகேடு செய்வது அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ20,000 கோடிக்கு ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து இந்த ஆணையத்தின் உறுப்பினர் (புலனாய்வு) ஜான் ஜோசப் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி வரை சுமார் ரூ20,000 கோடிக்கு மேல் ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.