கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஒரே கம்பத்தில் கொடி ஏற்றுவதில் அதிமுக, அமமுக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளையொட்டி, கூடலூர் பழைய பஸ் நிலையம் அருகே கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இப்பகுதியில் அமமுக தொழிற்சங்கம் சார்பில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் காலையில் அதிமுக அணியினர் கொடி ஏற்றி உள்ளனர். பின்னர் அமமுக வினர் அதே கம்பத்தில் கொடி ஏற்ற வந்தனர். ஒரே கம்பத்தில் கொடி ஏற்றுவதில் அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சரவணன் என்பவர் காயமடைந்தார். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரை அடுத்து தாங்கள் ஏற்றிய கொடியை அகற்றி கொள்வதாக அதிமுக அணியினர் கூறியுள்ளனர். ஆனால் மாலை 3 மணி வரை கொடி அகற்றப்படவில்லை.