காபூல்: ஆப்கானிஸ்தானில் 17 ஆண்டுகளாக நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா-தலிபான் இடையே கத்தாரில் இன்று 2ம் கட்ட பேச்சு தொடங்குகிறது. அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட போராக நடந்து வருவது ஆப்கானிஸ்தான் போர். ஒசாமா பின்லேடனின் ‘அல் கொய்தா’ அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 2001, செப்டம்பர் 11 தேதி அமெரிக்காவில் நியூயார்க்கின் இரட்டை கோபுரம், ராணுவ தலைமையகமான பென்டகன் ஆகியவற்றின் மீது விமானங்களை மோதி பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த அமைப்பின் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்கள் புகலிடம் அளித்தனர். இதையடுத்து, ஆப்கான் மீது கடந்த 2001ம் அக்டோபர் மாதம், அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படை தாக்குதலை தொடங்கியது. அங்கு தலிபான் ஆட்சி அகற்றப்பட்டு, புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. மேலும், கடந்த 17 ஆண்டுகளாக அமெரிக்க படை ஆப்கானில் முகாமிட்டு, தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், ஆப்கான் ராணுவத்தினருக்கு அமெரிக்க ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது. ஆப்கான் போரிலிருந்து நேட்டோ படைகள் படிப்படியாக வெளியேறி விட்டன. ஆனால், அமெரிக்கப்படை மட்டும் அங்கு கடந்த 17 ஆண்டுகளாக முகாமிட்டுள்ளது.