சென்னை: தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பெயரை பயன்படுத்தி அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்த பெண் உட்பட 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருவான்மியூரை சேர்ந்த கதிரவன் கடந்த ஜூலை 17ம் தேதி புகார் ஒன்று அளித்தார். அதில், திருவான்மியூர் காமராஜர் நகரில் வசித்து வரும் ரமா என்பவர், நான், தலைமை செயலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். எனது உறவினர் தான் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். அவரது சிபாரிசில் உங்களது மகனுக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன் என்றார். அதற்காக ரூ.6.5 லட்சம் தர வேண்டும் என்று கூறினார். அதை நம்பி, அவரது மகன் வருண் சீனிவாசன் என்பவர் வங்கி கணக்கில் நான் ரூ.5 லட்சம் செலுத்தினேன். மேலும், ரூ.1.50 லட்சத்தை கையில் கொடுத்தேன்.