பழநி அருகே ஆயிரம் ஆண்டு பழமையான ராஜராஜ சோழன் கால அரிய நாணயங்கள் கண்டெடுப்பு

பழநி: பழநி அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான ராஜராஜசோழன் கால அரிய வகை நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே போடுவார்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் வீட்டை சுத்தம் செய்யும்போது சில பழைய நாணயங்கள் கிடைத்துள்ளன.  இவற்றை தொல்லியல் ஆர்வலர் கதிரவனிடம் காட்டியுள்ளார். இதையடுத்து தொல்லியல் ஆய்வாளர்கள் நந்திவர்மன், ராஜேஸ்வரி, ரவிச்சந்திரன் ஆகியோர் நாணயங்களை ஆய்வு செய்தனர்.  இதுகுறித்து நந்திவர்மன் கூறுகையில், ‘‘1,000 ஆண்டுகள் பழமையான இந்த நாணயங்கள் முதலாம் ராஜராஜசோழன் காலத்தை சேர்ந்தவை. கிபி 985ம் ஆண்டு அருள்மொழிவர்மர் என்ற பெயருடன், ஆட்சி பொறுப்பேற்ற ராஜராஜ சோழன், கிபி 993ல் இலங்கையின் மீது படையெடுத்து இலங்கை முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.

இலங்கை போரில் வெற்றி பெற்றதை குறிக்கும் வகையில் இந்த நாணயங்களை வெளியிட்டுள்ளார். 1.5 செமீ விட்டமும் 0.5 மிமீ தடிமனும் கொண்ட இந்த நாணயங்கள் ஒழுங்கற்ற வட்ட வடிவம் கொண்டுள்ளது. நாணயத்தின் ஒரு பக்கம் போர் வீரர்கள் வேலுடன் இருப்பது  போலவும், மற்றொருபுறம் ராஜராஜ சோழனின் முத்திரையும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் செம்பினால் செய்யப்பட்டவை. தங்கத்திலும் காசுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அவை இதுவரை கிடைக்கவில்லை. இந்த நாணயங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்க முயற்சிக்கப்படும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: