பழநி: பழநி பகுதியில் சப்போட்டா செடியில் வெள்ளை ஈ தாக்குதல் நோய் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பழநி அருகே ஆயக்குடி பகுதியில் அதிகளவில் கொய்யா, நெல்லி, சப்போட்டா, மிளகாய், கத்திரி, பருத்தி, எலுமிச்சை உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. இவை தமிழகத்தில் திருப்பூர், திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் இச்செடிகளில் மாவுப்பூச்சி மற்றும் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. மேலும் காய்கள் பூச்சி தாக்குதலுக்கு ஆளாகி புள்ளிகள் விழுந்து தகுதியற்றதாகி விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சப்போட்டா மட்டுமின்றி எலுமிச்சை, கொய்யா உள்ளிட்ட மற்ற காய்களும் இதே பாதிப்பிற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளன. காய்கள் பாதிப்பின் காரணமாக ஆயக்குடி பகுதி விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். யானை தொந்தரவால் அவதிக்குள்ளான விவசாயிகளுக்கு தற்போது மற்றுமொரு தொந்தரவாய் இந்நோய் தாக்குதல் அமைந்துள்ளது.