கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த ஆசியாவிலேயே வயதான கோயில் யானை மரணம்

திருவனந்தபுரம் : ஆசியாவிலேயே மிகவும் வயதான கோயில் வளர்ப்பு யானை நேற்று மரணமடைந்தது. திருவிதாங்கோடு தேவசம் போர்டுக்கு சொந்தமான தாட்சாயிணி என்ற யானை ஆசியாவிலேயே  மிகவும் வயதானதாக கருதப்படுகிறது. 88 வயதான இந்த பெண் யானை, குட்டியாக இருக்கும்போது கோடநாடு யானைகள் காப்பகத்தில் இருந்து திருவிதாங்கூர் மன்னர்  குடும்பத்துக்கு கிடைத்தது. பின்னர்  இந்த யானையை மன்னர் குடும்பம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் திருவாறாட்டு  கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியது. பின்னர் 1960ம் ஆண்டு இந்த யானை  திருவனந்தபுரத்தில் உள்ள செங்கல்லூர் மகாதேவர் கோயில் நிர்வாகத்திடம்  ஒப்படைக்கப்பட்டது. சுமார் 58 ஆண்டுகளாக இந்த ேகாயிலில்தான் தாட்சாயிணி பராமரிக்கப்பட்டு  வந்தது. திருவிதாங்கோடு தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள தாட்ஷாயிணி யானை நூற்றுக்கணக்கான கோயில் விழாக்களில் பங்கேற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த சில  தினங்களாக தாட்ஷாயிணி உடல் நலக்குறைவால் கடும் அவதிப்பட்டு வந்தது. இதனால் பாப்பனங்கோடு பகுதியில்  உள்ள தேவசம் போர்டுக்கு சொந்தமான யானைகள் காப்பகத்தில் சிகிச்சை அளித்து பராமரிக்கப்பட்டு  வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை திடீரென தாட்ஷாயிணி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தது. இது பக்தர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாட்ஷாயிணியின் உடல் இன்று பிரேத  பரிசோதனைக்கு பின்னர் பாப்பனங்கோட்டில் உள்ள தேவசம் போர்டுக்கு சொந்தமான  இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தாட்ஷாயிணிக்கு அஞ்சலி செலுத்தினர். தாட்ஷாயிணி ஆசியாவிலேயே மிகவும் வயதான வளர்ப்பு யானை என்ற பெருமையுடன் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. 2016ம் ஆண்டு இந்த யானைக்கு கஜராஜா என்ற பட்டமும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: