அபுதாபி: உலக வரலாற்றில் முதல் முறையாக அரபு நாட்டுக்கு சென்ற போப் பிரான்சிஸ், அபுதாபியில் நேற்று நிறைவேற்றிய சிறப்பு திருப்பலியில் 1.70 லட்சம் கத்தோலிக்கர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.ஐக்கிய அரபு நாடுகளில், 2019ம் ஆண்டு ‘சகிப்புத்தன்மை’ ஆண்டாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி அரபு நாட்டில் நடைபெறும் மத நல்லிணக்க கூட்டத்தில் கலந்துகொள்ள போப் பிரான்சிஸ்க்கு அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயத் அல் நயான் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட போப் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அபுதாபி வந்தார். நேற்று முன்தினம் போப் பிரான்சிஸ் முஸ்லிம் மத தலைவர்களை சந்தித்து பேசினார்.