சென்னை: புரோ வாலிபால் போட்டித் தொடர் கொச்சியில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் போட்டியில் கொச்சி-மும்பை அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் டி20, புரோ கபடி, ஐஎஸ்எல் தொடர்களைப் போன்று வாலிபால் போட்டிகளுக்காக இந்த ஆண்டு புரோ வாலிபால் லீக் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய வாலிபால் கூட்டமைப்பு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த தொடரை நடத்துகிறது. இதில் சென்னை ஸ்பார்டன்ஸ், காலிகட் ஹீரோஸ், அகமதாபாத் டிபெண்டர்ஸ், பிளாக் ஹாக்ஸ் ஐதராபாத், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி என 6 அணிகள் பங்கேற்கின்றன. ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 117 வீரர்கள் இந்த அணிகளில் விளையாடுகின்றனர்.
இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடிய மோகன் உக்கிரபாண்டியன், முத்துசாமி, அங்கமுத்து, கார்த்திக், பாக்கியராஜ், பிரைசூடன், பிரபாகரன், நவீன் ராஜா, அஸ்வின், ஷெல்டன் மோசஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இந்த அணிகளில் இடம் பெற்றுள்ளனர். இவர்களை தவிர ரூடி வேர்ஹாப், டேவிட் லீ உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களும் ஒவ்வொரு அணியிலும் இடம் பிடித்துள்ளனர். புரோ வாலிபால் லீக் முதல் சீசன் போட்டிகள் கொச்சி, சென்னை ஆகிய நகரங்களில் நடைபெறும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை விளையாடும். முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். 15 லீக் ஆட்டங்கள், 2 அரை இறுதி மற்றும் பைனல் என மொத்தம் 18 போட்டிகள் நடைபெறும்.
கொச்சியில் வண்ணமயமான தொடக்க விழாவுடன் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் கொச்சி - மும்பை அணிகள் மோதுகின்றன. முதல்கட்ட போட்டிகள் கொச்சியில் பிப். 13 வரை நடைபெறும். பின்னர் சென்னையில் பிப். 16, 17, 18 தேதிகளில் 3 லீக் ஆட்டங்களும், பிப். 19ல் முதல் அரை இறுதி, 20ம் தேதி 2வது அரை இறுதி, 22ம் தேதி இறுதிப் போட்டி நடக்கும்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி